Monday, December 15, 2008

ஒரு கடிதம் : போர்முனை

அன்புக்குரியவர்களே!

முப்பது வருடங்களுக்கு முன்பு, பாலா அண்ணைக்கு அந்த அக்கறையும், சிந்தனையும் வந்தது.

'தான் தனது நாட்டுக்காய் எதை, எந்த வழியில், எப்படிச் செய்ய முடியும்' என்ற கேள்வியை தன்னைப் பார்த்தே கேட்கும் ஒர் அக்கறையும், அந்தக் கேள்விக்குப் பதில் தேடும் சிந்தனையும் அப்போது அவரிடம் வந்தது.

அவருக்கு முன்னால் பல வழிகள் இருந்தன - அதற்குள் சிறந்தது என்று அவருக்குப்பட்டதை அவர் தேர்ந்தெடுத்தார்.அந்த வழியில் அவர் - ஒரு கையில் அன்ரியையும் பிடித்துக்கொண்டு - நடந்துகொண்டே இருந்தார், எந்தச் சலசலப்பும் இல்லாமல்.

பாலா அண்ணை எம்மை விட்டுப் போய் இன்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.இப்படியெல்லாம் நடக்கும் என்று வாழும் காலத்தில் அவர் சொல்லியபடியே, பல விடயங்கள், இப்போது அவர் இல்லாத காலத்தில் நடக்கின்றன.நடப்பவற்றைப் பார்த்து ஒரு புறம் கவலையும், நடக்கும் என்று சொன்ன அந்த மனிதரின் தொலைநோக்குப் பார்வையை நினைத்து மறுபுறம் வியப்பும் அடைகின்றேன்.2001 ஆம் ஆண்டு, நத்தார் நாள் அன்று, லண்டனில் அவரது வீட்டில் அவரோடு கதைத்துக்கொண்டிருந்தேன்.இந்தக் கால கட்டம் தான் முக்கியமானது. அதை நீங்கள் கவனிக்க வேண்டும்.'ஜெயசிக்குறு" படையினரைத் திருப்பித் துரத்தி, பரந்தனோடு ஆனையிறவை வீழ்த்தி முகமாலை வரை முன்னேறி நிலை கொண்டிருந்து புலிகள் படை. ஆனையிறவைத் திரும்பவும் பிடிக்க “தீச்சுவாலை" என்ற மாபெரும் படையெடுத்தவர்களையும் புலிகள் முறியடித்திருந்தனர்.கிழக்கில் மிகப் பெரும் நிலப்பரப்பும் புலிகளின் ஆளுகையில் இருந்தது. தமிழீழப் போர் அரங்கில் நிகழ்ந்திருந்த இந்த மாபெரும் இராணுவ சாதனைகளின் மகுடமாக -கட்டுநாயக்கா வான்படைத்தளத்தையும், விமான நிலையத்தையும் தாக்கி, சிறிலங்காவின் பொருளாதாரத்தையும் புலிகள் அதள பாதாளத்தில் தள்ளியிருந்தனர்.வாலைச் சுருட்டிக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு வரத் தயாரானது சிறிலங்கா அரசு.தமிழீழ விடுதலைப் போராட்டம் அப்போது சர்வதேச மயப்பட்டிருக்கவில்லை.

முதற் தடவையாக, அப்போது தான், தென்னாசியாவுக்கு வெளியிலிருக்கும் நாடொன்று இலங்கை இனப்பிரச்னையில் தொடர்புபட்டது.புலிகளுடன் சமரசம் செய்ய நோர்வேயை அழைத்திருந்தார் சந்திரிகா அம்மையார்.நோர்வே அரசின் இராஜதந்திரி திரு. எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் வன்னிக்கு விஜயம் செய்து தலைவர் பிரபாகரனைச் சந்தித்து விட்டுச் சென்றிருந்தார்.

தமிழீழத்தில் இப்படியான நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருந்த அதே நேரத்தில் - துரதிர்ஸ்டவசமாக - உலகத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்தது.அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களைப் பயங்கரவாதிகள் தகர்த்தார்கள். உலகில், அரசு அல்லாத ஆயுதச் செயற்பாட்டாளர்கள் எல்லோரையும் பயங்கரவாதிகள் என்று முத்திரையிடும் கொள்கையை வரித்துக்கொணடது அமெரிக்க அரசு. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை அது ஆரம்பித்து, முழு உலகையும் அந்தப் போரின் களம் ஆக்கியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடாத்துவதாகச் சொல்லிக்கொண்ட அரசுகள் எல்லாவற்றுக்கும் தனது தார்மீக ஆதரவையும் அது வழங்கியது.இது ஒரு மிக முக்கியமான திருப்பம்.

இந்த நேரத்தில் தான் நான் பாலா அண்ணையுடன் கதைத்துக்கொண்டிருந்தேன்.இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில் - அப்போது இந்தப் போர் நிறுத்த உடன்படிக்கை எழுதப்பட்டிருக்கவில்லை. ஆனால், எழுதுவதற்கான ஏற்பாடுகளில் பாலா அண்ணை ஈடுபட்டிருந்தார். அன்ரி கொடுத்த தேநீரை அருந்திய படி பாலா அண்ணை நிதானமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

'இது ஒரு முக்கியமான விசயம், ஐசே. இதை நாங்கள் சரியாக விளங்கிக்கொள்ள வேணும். இராணுவ ரீதியில நாங்கள் உச்ச நிலையில இருக்கிறம். இதில இருந்து நல்ல அரசியல் விளைவுகளை எடுக்க வேணும். இந்தப் போர் நிறுத்தத்தையும், பேச்சுவார்த்தையையும் நாங்கள் சரியாகக் கையாள வேணும். இந்தியாவும் இதில ஒரு முக்கியமான குயஉவழச. அடுத்த பக்கத்தில, அவனொருத்தன் அமெரிக்காவில அடிச்சுப்போட்டு ஒடிப் போய் குகைக்குள்ள ஒழிஞ்சுகொண்டிருக்கிறான். இப்ப அமெரிக்காவுக்குப் பின்னால மேற்குலகம் திரண்டு நிற்குது. இதுக்குள்ள நிறைய சூட்சுமங்கள் இருக்கு. அதுகளை சரியாக விளங்கிக்கொண்டு நாங்கள் பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் காய்களை நகர்த்த வேணும் எங்கட போராட்டம் சர்வதேசமயப்படுவது ஒரு நல்ல விசயம். ஆனால், அதில தான் ஆபத்துக்களும் இருக்குது. போராட்டம் சர்வதேசமயப்பட்டால் அதில் தங்களுக்கு என்ன நன்மை, என்ன தீமை என்று தான் எல்லா நாடுகளும் பார்ப்பாங்களே இல்லாமல், தமிழ் சனங்களுக்கு எது நன்மை என்று ஒருத்தனுக்கும் அக்கறையில்லை. அதனால, போராட்டத்தை அழித்து விடத்தான் எல்லாரும் பார்ப்பாங்கள். பாலஸ்த்தீனத்துச் சனங்களைப் பாராடாப்பா. அதுகளிண்ட போராட்டத்திற்கு இது தான் நடந்தது. பேச்சுவார்த்தை, சமாதானம் அது இது என்று இழுத்தடிச்சு, அதுகளைப் பிரிச்சு, சலிப்பு வரப்பண்ணி இண்டைக்கு அழிச்சுப்போட்டாங்கள். அந்த நிலைமை எங்களுக்கு வராமல் நாங்கள் கவனமாக இருக்க வேணும்."

இன்று - ஏழு வருடங்களின் பின்னர் - கிளிநொச்சியினதும் முல்லைத்தீவினதும் வீழ்ச்சிக்காக இந்த உலகம் பொறுமையிழந்து காத்துக்கொண்டிருக்கின்றது.

பாலா அண்ணை எம்மோடு இல்லை.

****

கடந்த சில காலங்களாகவே என்னுடைய மனச்சாட்சிக்கும் எனது ஆன்மாவுக்கும் இடையில் நடந்துகொண்டிருக்கும் ஒரு உரையாடலில் உங்களையும் இணைத்து, உங்களுடனும் அதைப் பகிர்ந்துகொளவதற்காகவே நான் இங்கே எழுதுகின்றேன்.

தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் - கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி - சற்று நேரம் அமைதியாக, தனிமையில் இருந்து யோசிக்க வேண்டும்.எங்களில் எவ்வளவு பேர் இன்றைய காலத்தின் முக்கியத்துவத்தை சரிவரப் புரிந்துகொண்டிருக்கின்றோம் என்பது எனக்குத் தெரியவில்லை: ஆனால், எங்களது வாழ்வுக் காலத்தின் அதிமுக்கியமான ஒரு காலகட்டத்திலே நாம் எல்லோரும் இப்போது இருக்கின்றோம்.

இன்று இந்த முழு உலகமும் ஒன்றாகத் திரண்டு நிகழ்த்தும் ஒரு யுத்தத்திற்கு எதிராகத் தமிழினம் போராடிக்கொண்டிருக்கின்றது.இப்போது வன்னியில் நடந்துகொண்டிருக்கும் யுத்தத்தை நாங்கள் மிகச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும்.அதற்குப் பின்னால் இருக்கும் சூட்சுமங்கள், நோக்கங்கள் என்பவற்றை நாங்கள் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.அதில் நாங்களே அக்கறை காட்டவில்லையென்றால், தமிழர்கள் அல்லாத அடுத்தவர்கள் யாரும் அதில் அக்கறை காட்ட மாட்டார்கள். அந்தப் போரை நாங்களே சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்றால், தமிழர்கள் அல்லாத ஏனையவர்களுக்கு நாம் அதனை விளங்க வைக்க முடியாது.

ஏதோ, சிங்களப் படைகள் தாமாகப் போராடி - புலிகளைத் தோற்கடித்து - முன்னேறி வருகின்றன என்று இந்த விடயத்தை நாம் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு போய்விடக்கூடாது.இது மிகுந்த ஆழமான ஒரு விடயம். தமிழர்களாகிய நாங்கள் இந்த விடயத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.அங்கே இரண்டு படைகளுக்கு இடையில் போர் நிகழ்கின்றது.தமிழர்களின் பலத்தில் -தமிழர்களின் ஆதரவில் -தமிழர்களின் உதவியில் -தமிழர்களின் உறுதியில் -தமிழர்களுக்காக -தமிழர்களே போராடும் தமிழர் படை ஒரு பக்கத்திலும்,மறுபுறத்தில் -சைனாவிடம் ஆயதங்கள் வாங்கி -பாகிஸ்தானிடம் பீரங்கிகள் வாங்கி -ரஸ்யாவிடம் விமானங்களை வாங்கி -ஈரானிடம் பணம் வாங்கி -அமெரிக்காவிடம் ஆலோசனைகள் வாங்கி -இந்தியாவிடம் உளவுத் தகவல்களை வாங்கி -சிறிலங்காவிடம் ஆட்களை வாங்கிப் போராடும் ஓர் உலகப் படை அடுத்த பக்கத்திலுமாக இந்தப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.இந்த மாபெரும் உலகப் படைக்கு முன்னால், சில ஆயிரம் போராளிகளை மட்டுமே கொண்ட தமிழர் படையை வைத்துக் கொண்டு பிரபாகரன் போராடிக்கொண்டு இருக்கின்றார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.தமிழர்களைப் பொறுத்தவரை -இது ஏதோ ஒவ்வொரு நாளும் காலையில் மாலையிலும் செய்தியைப் பார்த்து விட்டு, அல்லது காண்கிற இடங்களில் தெரிந்தவர்களுடன் அரசியல் கதைத்து, புதினம் கேட்டுவிட்டுப் போகிற ஒரு சாதாரண விடயம் அல்ல.இது ஒட்டு மொத்தத் தமிழினத்திற்கும் எதிராக இந்த முழு உலகம் திரண்டு நிகழ்த்துகின்ற போர்.

தமிழ்நாடு, மலேசியா, மொறீசியஸ், சிங்கப்பூர், தமிழீழம் என்று உலகத் தமிழினம் ஒன்றாகத் திரண்டு ஒருபுறத்திலும் -உலக வல்லரசுச் சக்திகள் எல்லாம் சிறிலங்காவை சேர்த்து வைத்துக்கொண்டு மறுபுறத்திலும் இந்தப் போரில் நிற்கின்றன.வன்னிப் போர்க்களத்தில் மட்டும் இந்தப் போர் நடந்துகொண்டிருக்கவில்லை. இந்த உலகத்தின் அரசியல் - இராஜதந்திரக் களத்திலும் இந்தப் போர் நடந்துகொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.தமிழர்கள் ஒவ்வொருவரும் - விரும்பியோ விரும்பாமலோ - அவர்கள் இந்த உலகில் எங்கு வாழ்ந்தாலும் - இந்தப் போரின் பங்காளிகள். ஓவ்வொரு தமிழனும் ஒவ்வொரு வகையான போராளி. அதில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். இந்தப் போர், வெற்றிக்கும் தோல்விக்கும் அப்பாற்பட்ட விடயம்.

போர்முனையிலே விடுதலைப் புலிகள் இயக்கம் நிலப்பகுதிகளை இழந்திருப்பது உண்மை தான். ஆனால், இடங்களைப் பிடிப்பதற்கும் இழப்பதற்கும் அப்பால் நாங்கள் போராட வேண்டும் என்பதே இன்று எல்லாவற்றையும் விட முக்கியமானதாகும்.ஏனெனில் - இன்று நடக்கின்ற இந்தப் போர் தான் - நாங்கள் இந்த உலகத்திற்குக் கொடுக்கின்ற அதியுச்சத் தகவல்.இந்தப் போர் தான் - தமிழர்கள் தொடர்பான தங்கள் வெளிநாட்டுக் கொள்கைளை வகுப்பவர்களுக்கு ஒரு அதி முக்கியத் தரவு.இந்தப் போரில் நாங்கள் ஒன்றாக நின்று - ஒரே குரலில் பேசி - ஒரே செய்தியை சம்மந்தப்பட்டவர்கள் எல்லோருக்கும் சொல்ல வேண்டும். எங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்கும் வரை நாங்கள் போராடியே தீருவோம் என்ற விடயத்தை நாம் இந்த உலகிற்கு உணர்த்த வேண்டும்.

ஒருபுறத்தில் சிறிலங்கா அரசோடு சேர்ந்து புலிகளுக்கு எதிரான போரை நடாத்திக்கொண்டு -மறுபுறத்தில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்களை சிறைகளில் அடைத்துக்கொண்டு -ஏனைய தமிழர்களைப் பயமுறுத்தி வைத்துக்கொண்டு -இந்த உலகம் எம்மை பணிய வைக்கப் பார்க்கின்றது.போரும், போராட்டமும் நீண்டு செல்லச் செல்ல - நாங்கள் களைத்துப் போய் விடுவோம் என்று இந்த உலகம் நினைக்கின்றது.சலிப்பும் - விரக்தியும் - ஏமாற்றமும் சேர்ந்துகொள்ள - எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு தமிழர்கள் அடங்கிப் போய்விடுவார்கள் என்று இந்த உலகம் எதிர்பார்க்கின்றது.ஆனால், யார் எதைச் செய்தாலும் நாங்கள் போராடியே தீர வேண்டும்.போராடுவதைத் தவிர இந்த உலகம் வேறு வழிகள் எதனையும் எமக்கு விட்டு வைக்கவில்லை.எங்களது அரசியல் உரிமைகளைப் பெற்று -எங்களை நாங்களே ஆளுகின்ற ஒரு சூழல் பிறக்கும் வரை நாங்கள் போராடியே தீருவோம் என்பதை இந்த உலகிற்கு நாம் உணர்த்த வேண்டும்.இவை மட்டுமல்ல -எல்லாவற்றையும் விட முக்கிமான இன்னொரு விடயத்தையும் நாங்கள் இந்த உலகத்திற்குச் சொல்ல வேண்டும். இந்த உலகம் எமக்கு இன்று எமக்கு இழைக்கின்ற இந்த அநீதியை தமிழர்கள் என்றும் மறக்கமாட்டர்கள் என்பது தான் அது. எங்களது ஆன்மாக்களில் இந்தக் காயம் என்றும் ஆறாமல் அப்படியே இருக்கும் என்பதை நாம் இந்த உலகத்திற்குச் சொல்ல வேண்டும்.எங்களது வேதனையும், எங்களது கோபமும் அப்படியே எம் மனதில் இருக்கும் என்பதை நாம் இந்த உலகத்திற்குச் சொல்ல வேண்டும்.எங்களது குழந்தைகளுக்கும், குழந்தைகளின் குழந்தைகளுக்கும் நாம் இந்த வரலாற்றைச் சொல்லுவோம் இந்த உலகம் எங்களை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டு நாங்கள் அழியும் நாளுக்காகக் காத்திருந்தது என்பதை எமது பரம்பரைக்கே சொல்லுவோம் என்பதை நாம் இந்த உலகத்திற்கு உணர்த்த வேண்டும்.எவ்வளவு நெருக்கடிகள், எவ்வளவு அழிவுகள், போர்முனைப் பின்னடைவுகள் வந்தாலும் - அத்தனைக்குள்ளும் நாங்கள் போராடுவோம்.எமது போராட்டம் இன்று மூன்று முனைகளில் நடைபெறுகின்றது -விடுதலைப் புலிகள் போர் முனையில் நடாத்தும் ஆயுதப் போர் ஒரு முனை.எவ்வளவு அழிவுகள் வந்தாலும் எம் மண்ணின் ஆன்ம சக்தியாக நாங்கள் வாழ்ந்தே தீருவோம் என வாழும் வன்னி மக்கள் நிகழ்த்தும் போர் அடுத்த முனை.அனைத்துலக ரீதியாகத் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் போர் மூன்றாவது முனை.இந்த மூன்று முனைப் போராட்டங்களும் சம நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் மட்டுமே தனியாக ஆயுதப் போரை நடாத்தி தமிழர்கள் எமது போராட்டத்தை வெல்லவும் முடியாது -வெளிநாடுகளில் தமிழர்கள் மட்டுமே அரசியல் வேலைகளைச் செய்து நாம் எமது உரிமைகளைப் பெற்றுவிடவும் முடியாது.இந்த இரண்டும் ஒரேயடியாக நிகழ வேண்டும்.


தலைவர் பிரபாகரன் அவர்களும், விடுதலைப் புலிப் போராளிகளும் அவர்களது போராட்டத்தை, அவர்களது சக்திக்கும் மீறிச் செய்கின்றனர். அங்கே வாழுகின்ற மக்கள், எமது தேசிய இனத்தின் உயிர் நாடியாக - அவர்களிடம் இருக்கின்ற அனைத்தையும் கொடுத்துப் போராடுகின்றார்கள்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களாகிய நாங்கள் எங்களால் ஆன எதனைச் செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.ஆனால், எம் ஒவ்வொருவருக்கும் இன்று தேவையானது அந்த அக்கறையும், சிந்தனையும் மட்டும் தான்.'நான் என் நாட்டுக்காய் எதை, எந்த வழியில், எப்படிச் செய்ய முடியும்?" என்ற கேள்வியை எம்மைப் பார்த்தே நாம் கேட்கும் ஒர் அக்கறையும், அந்தக் கேள்விக்குப் பதில் தேடும் சிந்தனையும் மட்டும் தான் இப்போது தேவையானது.அது இரண்டும் எம் ஒவ்வொருவரிடமும் இப்போது இருந்து விட்டால் - நாம் கேட்பதை இந்த உலகம் தந்தே தான் ஆக வேண்டும்.வேறு வழியில்லை.

நன்றி : தமிழ்நாதம்



Sunday, November 23, 2008

லோஷன் விடுதலை!

ஒரு நற்செய்தி வெற்றி எப்.எம் முகாமையாளர் லோஷன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று நண்பகல் கொழும்பு நீதிவான் முன்னிலையிலே ஆஜர்ப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

தற்கொடைப்போராளி ஒருவரின் கைத்தொலைபேசியில் லோஷனின் தொலைபேசி இலக்கம் இருந்ததாம். மற்றும் மலேஷியாவில் இருக்கின்ற ஒரு தமிழீழ விடுதலைப்போராளி ஒருவருடனும் தொடர்பு இருந்ததாம்.

இப்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளார். இனி அவரின் குரலின் வீச்சு சற்று ஒடுங்கித்தான் இருக்கும். இதுதான் இலங்கையின் ஜனநாயகம்.

சரி அவர் விடுதலை ஆகிவிட்டார்தானே. அவ்வளவும் இப்போதைக்கு போதும். ஆனால் இன்னமும் அந்த சிறைகளிலே வாடும் அப்பாவித் தமிழர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என நாம் பிரார்த்திப்போம்.

Sunday, November 16, 2008

லோஷன் கைது!

பிரபல தமிழ் அறிவிப்பாளர் ஏ.ஆர்.வி.லோஷன் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.20 மணியளவில் சிறிலங்கா பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ வின் நேரடிக் கண்கானிப்பில் இயங்கும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால்(ரிஐடி) கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இவரது வசீகரமான குரலும், ஒலிபரப்ப்பின் போது பிசிறில்லாமல் உச்சரித்து வார்த்தைகளுடனான விளையாட்டும் தமிழ் பேசும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இவர் ஒரு வலைப்பதிவர். (அவரது வலைப்பூவிற்கு செல்ல)அண்மையில் 25000 வருகைகளை ஒரு பதிவாக இட்டவர். 3 மாத்திற்குள் இவரது வலைப்பூ பெரிய அளவில் எல்லோரையும் எட்டியது.

ஆரம்ப காலத்தில் சக்தி எவ்.எம் ல் பணிபுரிந்து பின்னர் முரண்பாடுகளுடன் வெளியேறி சூரியன் எவ்.எம் ல் பணிபுரிந்து அதிலிருந்தும் முரண்பாடுகளுடன் வெளியேறி தற்போது வெற்றி எவ்.எம் ல் பணிபுரிந்து வந்தார்.

இந்த ஊடகம் ஒரு அரச சார்பான ஊடகமாக இருக்கிறது என்பது எல்லோரினதும் கருத்து. இருந்தும் லோஷனின் வலைப்பூ எழுத்து இவரை ஒரு துணிகர எழுத்தாளனாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. இவரது ஒலிபரப்பின் போது சாடை மாடையாக அரசைத் தாக்குவதும் அவ்வப்போது இருந்து வந்தது.

முன்பு சூரியனில் இருக்கும் போதும் ஒருதடவை ரமணனுடன் செய்யும் நிகழ்ச்சிக்காக (நிகழ்ச்சியின் பெயர் நினைவில் இல்லை) பொறுப்பதிகாரிகளால் கண்டிக்கப்பட்டார்.

பின்னர் சூரியனில் காலையில் இவர் செய்யும் "சூரிய ராகங்கள்" நிகழ்ச்சியின் போது 'பேப்பர் பொடியனுடன்' சேர்ந்து பத்திரிகை கண்ணோட்டம் என சில தவறுகளை நக்கலுடன் நசூக்காக குறிப்பிட்டு வந்தார்.

ஒரு தேடல் கொண்ட வானொலிக் கலைஞன். நிறைய விடயங்களை வெளியே கொண்டு வருவார். இளையவர்களை ஊக்குவிக்கும் திறனும் நிறையவே இருந்தது. நல்ல மொழி ஆளுமை கொண்டவர். ஒலிபரப்பின் போது இவர் சொற்களில் தடங்கல் ஏற்பட்டது என்பதை விரல் விட்டு எண்ணலாம்.

சரி, இவரது கைதின் பின்னனி என்ன? முன்பு குருபரன் கடத்தப்பட்டார் 2006ம் ஆண்டின் பிற்பகுதியில். அங்கு அவரிற்கு 'புரியாணி' கொடுக்கப்பட்டதாக பின்னர் தகவல் கசிந்தது. ஆனால் குரபரனின் குரல் அத்தோடு நசுக்கப்பட்டே விட்டது. தற்பொழுதும் அவர் வானொலி ஊடகங்களில் பணிபுரிகிறாரா என எனக்கு தெரியவில்லை.

சில வேளைகளில் இவரிற்கும் புரியாணி கொடுக்கப்படலாம். ஆனால் எச்சரிக்கை எதுவெனில் "தம்பி றேடியோவில ஹலோ சொல்லி பாட்டை மட்டும் போடுங்கோ, கனக்க கதைக்க வேணாம்" என இருக்கலாம். விடுவிக்கப்பட்ட பின்னர் என்ன நடந்தது என அவரிடம் கேட்டால் 'என்னால் எதுவும் கூற முடியாது' என்பார். இவரது குடும்பம் சொல்லும் "தம்பி வெளிநாட்டை போங்கோ, எங்களுக்கு எல்லாம் காணும்". வேற வழியில்லை.

முன்னால் அரச வானொலியின் மிகப்பிரபல அறிவிப்பாளர் இப்போ சிறிலங்காவில் இல்லை.

சரி நான் என்ன சொல்ல வாறன்? ஒண்டும் இல்லைப்பாருங்கோ. இவங்களோட ஒண்டும் செய்ய முடியாது கண்டியளோ. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் எண்டும் பாசிசவாதிகள் எண்டும் சொல்லுற எங்கட ஆட்கள் இந்த இனவாத ராஜபக்ஸ அரசாங்கத்தை என்ன சொல்லப்போகினம்.

எத்தினை கொலைகள் நடந்திட்டு பாருங்கோ? எத்தினை விசாரனைக் கமிஷன் தொடங்கியாச்சு? உந்த சிறிலங்காதான் பாருங்கோ வேர்ல்ட் ல கூட விசாரனைக் கமிஷன் வச்சிருக்கிற அரசாங்கமா இருக்கும். ஒண்டும் முடிஞ்ச பாடில்லை. நிமலராஜன், நடேசன், தராக்கி சிவராம் அவன் இவன் எண்டு எல்லாரையும் போட்டுத்தள்ளிபோட்டாங்கள். ஆரேன் கேட்டால் "விசாரணைக் கமிஷன் போட்டிருக்கு இப்ப எங்களால் எதுவும் சொல்லேலாது" எண்டுவாங்கள். பிறகு ஊடக அமைப்புக்கள் ஒருக்கா வாயைக்கட்டி கையில ஒரு போர்ட்டையும் பிடிச்சுக்கொண்டு ஆர்ப்பாட்டம் ஒண்டு செய்வினம். அதோட எல்லாம் போவிடும் பாருங்கோ!

எங்கையும் வாழலாம் கண்டியளோ! இவனுகளோட இருக்கேலாதப்பா! ஆளைவிடு சாமி எண்டு எல்லாரையும் கலைக்கபோறானுகள். கரிகாலன் இவங்களை கலைக்கும் வரை இப்படிக் கைதுகள்,காணம்ல்போதல்கள், காலையில் சடலமாக இருத்தல் என்பன தொடரும்.

நோக்கம்...!

சில அரசியல்வாதிகளின் எண்ண ஓட்டங்களை இங்கே இடலாம் என நினைக்கிறேன்.

வணக்கம்!

உறவுகளே எனக்கு தெரிந்த இரகசியங்கள் இங்கே பரகசியமாகும். காத்திருங்கள்!