Thursday, April 23, 2009

அது போன வாரம்..! இது இந்த வாரம்...!!

ஈழத்தின் கிழக்கு பகுதியில் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் இதுகாறும் இரண்டரை இலட்சத்திற்கு அதிகமான அப்பாவி பொதுமக்கள் வசித்து வந்தனர். இன்று அவர்களில் சுமார் ஒரு இலட்சம் மக்களை வல்வளைப்பு செய்து அவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி இருக்கிறது. இவர்கள், ஒரு வருடத்திற்கும் மேலாக மன்னார், வவுனியா போன்றவற்றில் இருந்து இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து பின்னர் கிளிநொச்சி வந்தடைந்து அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து, அங்கிருந்து இறுதியாக சிறீலங்கா அரசு அறிவித்த பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அண்மைக்காலமாக வாழ்ந்து வந்தவர்கள்.

இங்கு வாழ்ந்து வந்த மக்களின் எண்ணிக்கையில் கொழும்பு அரசு எப்போதும் முன்னுக்கு பின்னான தகவல்களையே வழங்கி வந்தது. இந்த மக்களின் உண்மையான தொகையினை அந்த அரசால் அறிய முடியாத ஒன்றல்ல. மாவட்ட அரச அதிபர்கள் மூலமும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமும் அறிந்திருக்க முடியும். ஆனால் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்கில் குறைவான எண்ணிக்கையையே (ஆயிரக்கணக்கில்) தெரிவித்து வந்தது. காரணம் உலக நாடுகளின் மனிதாபிமானம் குறித்த எச்சரிக்கையாகும். இருந்தும் விடுதலைப்புலிகளும் அங்கிருக்கும் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினருமான கனகரத்தினம் அவர்களும் சரியான தொகையினை(இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான) தெரிவித்து வந்தனர். இதை சர்வதேசமும் செவிமடுக்கவில்லை. மாறாக அது கொழும்பின் மாயவலைக்குள் தன்னை மாய்த்து கொண்டது.

நேற்று சிறிலங்கா அரசு அறிவித்த தொகையில் ஒரு இலட்சம் மக்கள் பாதுகாப்புத்தேடி இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளனர் என்று அறிவித்துள்ளது. எந்த ஒரு ஊடகமும் இது குறித்து அவர்களை கேள்வி கேட்கவில்லை. முன்னர் ஒரு எழுபத்தையாயிரம் மக்களே உள்ளனர் என்று தெரிவித்து வந்த சிறீலங்கா அரசு இப்போது ஒரு இலட்சம் மக்கள் தமது பிரதேசத்துக்குள் வந்துவிட்டார்கள் என்கிறது. மேலும் அங்கே ஒரு சில ஆயிரம் மக்களே உள்ளனர் என்றும் கூறியுள்ளது. ஆனால் பன்னாட்டு செஞ்சிலுவை அமைப்பு மேலும் ஒரு அம்பதினாயிரம் மக்களுக்கு மேல் இருப்பதாக சொல்லியுள்ளது.

இலங்கை அரசு தமிழ்மக்களின் எண்ணிக்கையில் அவ்வப்போது தவறான தகவல்களை தெரிவித்து சர்வதேச சமூகத்தை ஏமாற்றி வந்துள்ளது. வெறும் அம்பதினாயிரத்திற்கும் குறைவான மக்களே இருந்தனர் என்று தனது கபடத்தன பிரச்சாரத்தை செய்து வந்தது. ஆனால் இப்போது அங்கிருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கையுடன் சிறிலங்கா அரசின் முகமூடி மீண்டும் ஒருதடவை கிழிந்துள்ளது.

(இது பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் வந்த செய்தி.....)

ஹெகலிய ரம்புக்வெலவிடமோ அல்லது கோத்தபாய ராஜபக்ஷவிடமோ அல்லது சரத் பொன்சேகாவிடமோ ஒரு கேள்வியை கேட்டால் "இப்போது வந்துள்ள மக்களின் தொகை, நீங்கள் முன்பு சொன்ன மக்களின் தொகையை விட பன்மடங்கு அதிகம். அதிலும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மேலும் 50000 ற்கு மேல் உள்ளது என்கிறது. உங்கள் கணக்கெடுப்பு பிழையே." அதற்கு அவர்கள் "அது போன வாரம்...இது இந்த வாரம்..முன்பு 40000 மக்கள் தான் இருந்தனர். இப்போது ஒரு இலடசம் மக்கள் வந்துள்ளனர். எமக்கும் குழப்பமாகத்தான் உள்ளது. இப்போழுது மேலும் ஒரு பத்தாயிரம் அளவிலான மக்கள் தான் இருப்பார்கள். அவர்களையும் விரைவில் மீட்டுவிடுவோம்."

இவர்கள் எப்போதும் நகைச்சுவைக்காரர்கள். இதிலே சர்வதேசம் மயங்கி அமிழ்ந்து போவதுதான் விந்தை.....!

No comments: